6 அரிய வகை பாம்புகளை கடத்தி வந்த இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது!
உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பெங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவுடன் சேர்ந்து மேற்கொண்ட சோதனைகளில் இந்த பாம்புகளைக் கண்டுபிடித்தனர்.
Speckled Kingsnake, Yellow Anaconda, Honduran Milk Snakes, Ball Python உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த 06 பாம்புகளை அவர் கொண்டு வந்துள்ளார்.
அவர் இந்த பாம்புகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிலையில், இவ்வாறான பாம்புகள் நாட்டின் காட்டுப் பகுதிகளில் விடுவித்தால் நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பில் கடுமையான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாம்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவைகள் என தெரியவந்துள்ளது

