550 மாணவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு – களுவதாவளைக் கிராமத்தில் இயங்கிவரும் சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” எனும் தொணிப் பொருளின்கீழ் அப்பியாசக் கொப்பிகள், உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், அமைப்பின் கல்விப் பிரிவின் தலைவருமான க.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் இதன் போது கோட்டக்கல்விப் பணிப்பாளர் அருள்ராசா, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தலைவரும், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளருமான க.பாஸ்கரன், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அவ்வமைப்பின் உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள 35 பாடசாலைகளைச் சேர்ந்த 550 மாணவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

களுதாவளையை சேர்ந்த கட்டாரில் தொழில்புரியும் உறவுகளின் பெரும் பங்களிபோடும் ஆதரவோடும், இயங்கிவரும் சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இனம்கண்டு அம்மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை இவ்வாறு வருடாந்தம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்