மத்திய கிழக்கு மோதல்களில் 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர்கள் நால்வரும் தற்போது சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும், தூதரகங்கள் ஊடாக இது தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஈரானின் போர் மோதல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. மத்திய கிழக்கிலுள்ள அண்டை நாடுகள் மீது இனிமேல் தாக்குதல்களை நடத்தப் போவதில்லை எனவும், இதுவரை நடத்திய தாக்குதல்களுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் ஈரான் ஜனாதிபதி அறிவித்துள்ள போதிலும், ஈரான் இராணுவம் தொடர்ந்தும் குவைத், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் வான் பாதுகாப்பு அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் ஒன்றின் பாகங்கள் விழுந்ததில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.