30 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுதலை!

-மன்னார் நிருபர்-

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில்,தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த மீனவர்களின் விசாரணை நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.

இதன் போது குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 26 மீனவர்களுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களுக்கு மூன்றாவது குற்றச்சாட்டிற்காக தலா 2 லட்சத்து 75ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளின் உரிமையாளர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மன்று உத்தரவிட்டது.

படகு தவிர்ந்த ஏனைய சான்று பொருட்களை அரச உடமையாக்க நீதவான் உத்தரவிட்டார்.