திருகோணமலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்சந்தை
-மூதூர் நிருபர்-
வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, வெளிநாட்டு தொழிற்சந்தை இன்று திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாகத்தின் பிரதி பொது முகாமையாளர் ஜெகத்பட்டு கெதர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்டார்.
இதன்போது, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர்களுக்கு பதிவு செய்யப்பட்ட பல வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட, வேலை வாய்ப்பு கண்காட்சியுடன் வேலை வாய்ப்புகள் தொடர்பான ஆலோசனை சேவைகளும் இங்கு இடம் பெற்றன.
மேலும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில், பதிவு செய்து, வெளிநாட்டுக்கு தொழிலுக்காக சென்ற பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு சான்றிதழ்களும் பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
2023 ஆம் ஆண்டு, தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்ற 49 மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.









