2020 இல் இடம்பெற்ற பாரிய கொள்ளை : பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது

கம்பஹா – தொம்பே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நகைக்கடை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டி 65 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால விசாரணைகளின் அடிப்படையில், பிரதான சந்தேகநபர் கையடக்கத்தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் பெலியத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வைத்திருந்த மற்றும் அவற்றை விற்பனை செய்ய முனைந்த மற்றொரு சந்தேகநபரும் வலஸ்முல்ல பகுதியில் வைத்து வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பெலியத்த மற்றும் வலஸ்முல்ல பகுதிகளைச் சேர்ந்த 39 , 42 வயதுடையவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரதான சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டு பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு, ஹோமகம பொலிஸ் பிரிவில் துப்பாக்கி முனையில் 250,000 ரூபாய் பணம் கொள்ளை, 2021 ஆம் ஆண்டு, தலங்கம பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து 514,500 ரூபாய் மதிப்புள்ள பணம், தொலைப்பேசி திருட்டு மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி 3 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தங்கப் பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை போன்ற குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.