1,593 கி.மீ தொடருந்து பாதையில் 478 கி.மீ மட்டுமே பயன்படுத்தும் நிலையில்!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் தொடருந்து வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சூறாவளி பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய வீதிகள் சேதமடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சுமார் 137,265 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 305 சிறு நீர்ப்பாசன கால்வாய்களும் அழிந்துள்ளன.

அழிவுக்குப் பின்னர் இதுவரை 246 வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடு முழுவதும் 22 பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு மீட்பு 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நுவரெலியா மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட 35 இலட்சத்து 31ஆயிரத்து 841 மின்சார இணைப்புகளில் 72 சதவீத இணைப்புக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.