15 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வல்லுறவு : ஐவர் கைது
இந்தியா- கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் 15 வயது சிறுமியை ஆறு இளைஞர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த சில தினங்களாக வீட்டில் வழக்கத்திற்கு மாறாக இருந்துள்ளார். இதனைக் கவனித்த அவரது பெற்றோர் அவரிடம் பொறுமையாக விசாரித்துள்ளனர்.
பொற்றோரின் விசாரணையின் போது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறுமி சொன்ன தகவல்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த புகாரின் அடிப்படையில் தற்போதுவரை ஐவரை பொலிசார் கைது செய்திருக்கின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ஒரு நபரை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குறித்த சிறுமி கடந்த 2024 டிசம்பர் முதல் ஜனவரி 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இரு முறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். முதல் முறை, தனது நண்பர் அழைத்ததன் பெயரில் அவருடன் அந்தப் பகுதியில் இருக்கும் மலைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அந்த ஆண் நண்பர் அவரது ஐந்து நண்பர்களை வரவழைத்து அங்கு அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினை ஐந்து நபர்களில் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். பிறகு அந்த வீடியோவைக் காட்டி மீண்டும் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இச்சம்பவங்களை அடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரைக் கைது செய்துள்ள நிலையில் , தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.