பாடசாலை கட்டிடத்தின் முதலாம் மாடியிலிருந்து விழுந்த மாணவி

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றதாகவும், மாணவி 15 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய CT ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதன் பின்னர் மேலதிக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்