10 லட்சம் ரூபாயை தீயிட்டு எரித்து 7 லட்சம் ரூபாயை வீதியில் வீசியவர் கைது!
-யாழ் நிருபர்-
யாழில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் அராலியை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டுக்கு முன்னால் 10 லட்சம் ரூபாய் பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார். அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்.
இந்நிலையில் வீதியால் சென்றவர்கள் அந்த பணத்தினை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
இதுகுறித்து சந்தேகநபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், 42 வயதுடைய, 3 பிள்ளையின் தந்தையான குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.