ஹெரோயினுடன் இருவர் கைது

 

-பதுளை நிருபர்-

பதுளை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

கரமதியா பகுதியை சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை கரமட்டிய பழைய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,390 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாகவும் மற்றைய சந்தேகநபர் 150 மில்லிகிராமுடன் கரமதியா 19 கட்டை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து கரமட்டிய பிரதேசத்திற்கு போதைப்பொருள் கொண்டு வரப்பட்டு பதுளை மஹியங்கனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக பதுளை மாவட்ட போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

கொழும்பில் மூவாயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு மில்லிகிராம் ஹெரோயின் பதுளையில் ஏழாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.