ஹட்டன் டிக்கோயா நகர பொது சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கிய தரமற்ற பொருட்கள்!

-நுவரெலியா நிருபர்-

ஹட்டன் டிக்கோயா நகரத்தில் உள்ள கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள், வெதுப்பகங்கள் மற்றும் இறைச்சி கடைகள் இன்று திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் உள்ளூராட்சி வாரத்துடன் இணைந்து, அம்பகமுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பல பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்புடன் இந்த திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் முறையற்ற வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட வியாபார நிறுவனங்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றம் ஊடாக வழக்குகள் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சில வியாபாரிகளுக்கு சிறு குறைபாடுகளை சரிசெய்ய 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, கால அவகாசத்தின் பின்னரும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யாத வர்த்தகர்களிற்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சுகாதார விதிமுறைகளை பேணாத பல வர்த்தக நிலைகளுக்கு முதற்கட்ட எச்சரிக்கை கடிதங்களும் இதன்போது பொதுச்சுகாதாரப் பரிசோதகளர்களால் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

ஹட்டன் டிக்கோயா நகரங்களில் தொடர்ந்து காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றமையடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹட்டன் டிக்கோயா நகரில் நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் இடையூறாக விற்பனை செய்த வியாபாரிகளையும் பொது சுகாதார பரிசோதகர்கள் வியாபாரத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

மேலும் சட்ட விரோதமான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வியாபாரம் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பாக, வீதி மற்றும் பொது இடங்களில், உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது எனவும் அறிவிப்பு வழங்கப்பட்டது .