
வைத்தியரின் அலட்சியத்தினால் தனது குழந்தை இறந்து விட்டதாக தந்தை முறைப்பாடு : வவுனியாவில் சம்பவம்!
-வவுனியா நிருபர்-
வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தை தெரிவிக்கும் போது
எனது மனைவியினை பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் அனுமதித்திருந்தேன், மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்துள்ளது.
இதனை தாங்கமுடியாத எனது மனைவி அங்குள்ள தாதி ஒருவருக்கு விடயத்தினை தெரிவித்திருந்தார், இதன்போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தொலைபேசியினை பயன்படுத்திக்கொண்டு, அது தொடர்பாக கவனமெடுக்காமல் அது ஒரு பிரச்சனையுமில்லை என தெரிவித்திருந்தார்.
பின்னர் வலிக்குரிய மருந்தினை எனது மனைவிக்கு தந்துவிட்டு உறங்குமாறு தெரிவித்துள்ளனர்.
மறுநாள் வைத்தியசாலைக்கு வந்த வைத்திய அதிகாரி ஒருவர் சீசர் செய்து குழந்தையினை எடுத்திருக்கலாம் தானே என கடமையில் இருந்த வைத்தியரை கேட்டுள்ளார்.
பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு எனது மனைவியை சிகிச்சை கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பலமணி நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை, இதற்குள் 7ஆம் விடுதியில் குளிரூட்டி இயங்கவில்லை என தெரிவித்து 5 ஆம் விடுதிக்கு எனது மனைவியை மாற்றியுள்ளனர்.
பின்னர் தாதி ஒருவர் தொலைபேசி அழைப்பை எடுத்து, என்னை வைத்தியசாலைக்கு வருமாறு அழைத்திருந்தார், அங்கு சென்றபோது அதிதீவிர சிகிச்சைபிரிவில் எனது குழந்தையினை அனுமதித்திருந்தார்கள்.
அங்குள்ள வைத்தியரிடம் கேட்டபோது, “5 ஆம் விடுதியில் இருந்து குழந்தையினை இங்கு அனுமதிக்கும் போதே உயிரில்லாத நிலைமையிலேயே தந்தனர், இருப்பினும் குழந்தையின் இதயத்துடிப்பினை நாம் மீட்டுள்ளோம், குழந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்து குழந்தையினை எனக்கு காட்டினர்.
பின்னர் நேற்றயதினம் இரவு எனது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
எனவே வைத்தியர்களின் அசமந்தபோக்கினால் எனது மனைவிக்கு நடந்த கொடுமைக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும், எனக்கு நீதி கிடைக்காமல் நான் சிசுவின் சடலத்தினை பொறுப்பெடுக்க மாட்டேன், என்று தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக சிசுவின் தந்தையால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கேட்டபோது, உள்ளக விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்