
வேலன் சுவாமியை சந்தித்து நலன் விசாரித்த கத்தோலிக்க மதகுரு
-யாழ் நிருபர்-
அண்மையில் தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட வேலன் சுவாமி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவரை கத்தோலிக்க மதகுருமார் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் மக்களோடு மக்களாக வேலன் சுவாமியும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
கத்தோலிக்க குருக்களான அருட்தந்தை வசந்தன், அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா, அருட்தந்தை ஜேக்குமார் அடிகளார் ஆகியோர் நேற்று திங்கட்கிழமை நல்லூர் சிவ ஆலயத்தில் வேலன் சுவாமிகளை பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
மதகுருமார்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமைக்கு கத்தோலிக்க மதகுருக்கள் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
