
வேனும் டிப்பரும் மோதியதில் ஏழு பேருக்கு காயம்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியை அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கல்முனையிலிருந்து பொலநறுவை நோக்கி பயணித்த வேனும் பொலநறுவையிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது.
வேனில் பயணித்த அனைவருமே காயங்களுக்குள்ளான நிலையில் பொதுமக்களினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .
இதில் காயம் அடைந்தோரில் இரண்டு ஆண்களும், ஐந்து பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




