
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அரசாங்க அதிபர்
-அம்பாறை நிருபர்-
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, தடயந்தலாவ பிரதேச வேளாண்மை செய்கையை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சித்தக அபேவிக்ரம இன்று வெள்ளிக்கிழமை மாலை நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக, ஏற்பட்ட பாரிய வெள்ள நிலைமையினால், தடயந்தலாவ நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் சுமார் 2800 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டிருந்த வேளாண்மைச் செய்கை பாதிப்படைந்திருந்தது.
அத்துடன் வெள்ளப் பெருக்கு காரணமாக, போக்குவரத்து வீதிகள் மற்றும் வயல் நிலங்கள் உடைப்பெடுத்து மணல் மேடுகளாக மாறியுள்ளதையும் அவதானித்தார்.
இதனையடுத்து, மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, விவசாயிகளின் பிரச்சினைக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்குமாறும் வேண்டிக் கொண்டார்.
