வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பயணித்த வேனின் சாரதி மீது குளவி தாக்குதல்

-நானுஓயா நிருபர்-

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இந்திய பிரஜைகளுடன் பயணித்த வேனின் சாரதி மீது குளவி கொட்டியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு நான்கு இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற போது, ​​நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இந்திய நாட்டினரைச் சேர்ந்த ஒரு குழுவினர் வேனில் இருந்து இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது வீதியோரத்தில் அருகில் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து இந்திய குழுவினரை துரத்தியபோது அவர்களைப் பாதுகாப்பாக வேனில் ஏற்றிய சாரதி இறுதியில் சாரதி இருக்கையில் ஏறும் போது குளவி கொட்டுக்கு இலக்கானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்த நானுஓயா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர் பின்னர் குளவித் தாக்குதலுக்கு உள்ளான சாரதி தனது உடல்நிலை மோசமாக இல்லை என்றும், சிகிச்சைக்காக நுவரெலியாவுக்குச் செல்வதாகவும் கூறியதை அடுத்து, நானுஓயா பொலிஸார் இந்திய நாட்டினர் குழுவை அதே வேனில் நுவரெலியா வரை பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.