வெளிநாட்டுப் பெண்களிடம் இருந்து பணம் பறித்த முச்சக்கரவண்டி சாரதிகள் கைது!

சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இருந்து பயணத் தொகையை விட அதிகமாக பணம் பறித்த இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 48 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வந்த பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து ரூ. 10,000 மற்றும் ரூ. 30,000 என்று அறவிடப்பட வேண்டிய பணத்திற்கு மேலதிகமாக பணம் பறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய சாரதிகள் மேலதிக விசாரணைக்காக கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.