வெளிநாட்டவர்களுக்கு வீடுகளையோ, ஹோட்டல் அறைகளையோ வாடகைக்கு வழங்கும் போது அவதானமாக இருங்கள்!

இணையதளங்களை அடிப்படையாகக் கொண்ட மோசடிகளில் இலங்கையர்கள் சிக்கிக் கொள்ளல் அதிகரித்துள்ளது, இலங்கையர்களை அவற்றில் சிக்க வைப்பதும் மோசடிக்காரர்களுக்கு இலகுவாகவுள்ளது, எனவே தான் இங்கு அவ்வாறான குற்றச்செயல்கள் அதிகளவில் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எனவே வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் போதும், ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு வழங்கும் போதும் உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

கண்டியில் 140க்கும் அதிகமானோரும், பாண்ந்துரையில் 22க்கும் அதிகமானோரும், இராஜகிரியவில் 15 பேரும், கண்டியில் 16 பேரும் என கடந்த சில தினங்களுக்குள் மாத்திரம் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமின்றி 500க்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள், 200க்கும் மேற்பட்ட கனணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணகளில் இவ்வாறானவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் வீட்டு உரிமையாளர்களும் இவர்களுக்கு உடந்தையாகவுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது இவர்கள் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அறிந்தே தமது வீடுகளை வாடகைக்கு வழங்குகின்றனர். மிகவும் சூட்சுமமான முறையில் அவர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். கண்டியில் 77 அறைகள் உள்ள ஒரு ஹோட்டலில் 47 அறைகளை வாடகைக்கு பெற்று அங்கு சகல வசதிகளுடனும் மோசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

எனவே ஹோட்டல் உரிமையாளர்களும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் யாரும் அறியாமல் கோடிக்கணக்கான பணத்தை இழக்க நேரிடும்.

இவர்கள் அனைவரும் சுற்றுலா வீசாவிலேயே வருகை தந்துள்ளனர். அவர்கள் இலங்கையை தெரிவு செய்வதற்காக சரியான காரணத்தை எம்மால் கூற முடியாது.

ஆனால் இந்த மோசடிக்காரர்களால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு இலங்கையிலுள்ளவர்கள் விரைவாக பதிலளிக்கின்றனர். தென்னாசியாவில் இவ்வாறான பிரஜைகள் கொண்ட நாடுகளை அவர்கள் தெரிவு செய்கின்றனர் என்றார்.

அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் குறிப்பிடுகையில், கண்டி மற்றும் அத்துறுகிரிய பிரதேசங்களில் இணையதள மோசடியில் ஈடுபட்ட சீனப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேறு நாடுகளில் வங்கி கணக்குகளை ஊடுருவி இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே வீடுகளை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு வழங்கும் போது மிக அவதானத்துடன் செயற்படுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கையின் வங்கி மற்றும் நிதி கட்டமைப்புக்கள் இதுவரை இவர்களால் ஊடுறுவப்படவில்லை. விசாரணைகள் மூலமாகவே அதனை கண்டறிய முடியும் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்