வெருகல் – நாதன் ஓடையில் சட்ட விரோத மணல் அகழ்வால் மக்கள் பாதிப்பு

-கிண்ணியா நிருபர்-

வெருகல் நாதன் ஓடையில் மணல் அகழ்விற்காக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, இங்கு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அளவிற்கு அதிகமாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் காரணமாக மாரி காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது இதன் போது தனது பிரேரனைகளை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இம்ரான் மஹ்ரூப் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ,

அனுமதி வழங்கப்பட்ட அளவிற்கு மேலதிகமாக மணல் அகழ்வதனையும், புதிதாக மணல் அகழ்விற்கு அனுமதி வழங்குவதனையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே, வெள்ளப்பெருக்கு, சுற்றாடல் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலதிகமாக மணல் அகழ்வதனையும், புதிதாக மணல் அகழ்விற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துச்சேனை பொது விளையாட்டு மைதானம் விளையாட முடியாத அளவிற்கு பள்ளமும், குழியுமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இப்பகுதியிலுள்ள விளையாட்டு வீரர்கள் தமது விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரமுடியாத நிலையில் உள்ளனர்,

மேலும் அருகிலுள்ள முத்துச்சேனை அரசினர் கலவன் பாடசாலையும் மேற்படி மைதானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, முத்துச்சேனை கிராமத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் முத்துச்சேனை அரசினர் கலவன் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி மேற்படி மைதானத்தை விளையாடுவதற்கு ஏற்ற வகையில் புனரமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெருகல் பிரதேச செயலக பிரிவின் எல்லை சரியாக அடையாளப்படுத்தப்படாமையினால் சேருவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்களினால் வெருகல் பிரதேசத்திலுள்ள காணிகள் அபகரிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது.

எனவே, வெருகல் பிரதேச செயலகத்திற்குரிய எல்லையினை நான்கு பக்கமும் அடையாளப்படுத்தி எல்லையிடுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது போன்று . வாழைத்ததோட்டம் கிராமிய வைத்தியசாலையினை அப்பகுதியைச் சூழவுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படாமையினால் வேறொரு வைத்தியசாலையிலிருந்து வருகைதரும் வைத்தியர் தினமும் காலை 8.30 மணியிலிருந்து 10.00 மணிவரை மாத்திரம் கடமையாற்றி வருகின்றார்.

10.00 மணிக்குப் பிறகு சுகவீனமடைவோர் தூரத்திலுள்ள ஈச்சிலம்பற்று வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிகியுள்ளது.

போக்குவரத்துப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இங்குள்ள மக்களால் ஈச்சிலம்பற்று வைத்தியசாலைக்கு செல்வது சிரமமானது எனவே, வாழைத்ததோட்ட கிராமிய வைத்தியசாலைக்கு நிரந்தரமாக வைத்தியர் ஒருவரினை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

முத்துச்சேனை, மாவடிச்சேனை எனும் முகவரியில் வசிக்கும் திருமதி சிவபாலன் அஜந்தினி என்பவரின் தந்தைக்குச் சொந்தமான 2 1/2 ஏக்கர் காணி வாழைத்தோட்டம் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ளது,

இதில் 1 ஏக்கர் காணியில் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர், அவரின் தாய் தந்தையினர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர், இந்நிலையில் இவர் உறவினரின் வீட்டில் வசித்து வருகின்றார்.

மிகுதி 1 1/2 ஏக்கர் காணியினை தனக்கு பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, இராணுவத்தினரின் பாவனையில் இருக்கும் 1 ஏக்கர் காணியை தவிர்த்து மிகுதி 1 1/2 ஏக்கர் காணியினை காணி உரிமையாளர் சிவபாலன் அவர்களின் மகளான திருமதி. சிவபாலன் அஜந்தினிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொல்லன் குளத்தைப் பயன்படுத்தி தற்பொழுது சுமார் 100 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகின்றது. குளத்தில் மணல் நிரம்பிக் காணப்படுவதினால் குளத்தின் முழுமையான பயனைப் பெற முடியாதுள்ளது,

எனவே, குளத்தினை தூர்வாரி அங்கு தேங்கியுள்ள மேலதிக மணலினை அகற்றினால் மேலதிகமாக இன்னும் 100 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் வழங்க முடியும். ஆகவே, கொல்லன் குளத்தினை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொல்லன் குள விவசாய வீதியில் பாலமொன்று இன்மையினால் நெல் அறுவடையின் போது விவசாயிகள் தமது அறுவடையினை பாதுகாப்பாக கொண்டுவர முடியாத நிலையில் உள்ளனர்.

அதேபோன்று பின்னியடி – கருக்காமுனை வீதியில் மாரி காலங்களில் மக்கள் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது. எனவே, கொல்லன் குள வீதியிலும், பின்னியடி – கருக்காமுனை வீதியிலும் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத்துறையில் பொது விளையாட்டு மைதானத்திற்கு காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை மைதானமாக பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் மேலும் தெரிவித்தார்.