வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

-மூதூர் நிருபர்-

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை, வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக் கிழமை பிரதிஷ்ட பிரதம குருவான அச்சுவேலி சிவாகம கலாநிதி சிவ ஸ்ரீ கு வை க வைத்தீஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது விநாயக வணக்கத்துடன் விஷேட திரவிய ஹோம மஹாயாகம் இடம்பெற்றது.

பிள்ளையார், முருகனுக்கான கும்பமும் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வெளி வீதி உலாவந்தது. இதன் பின்னர் அந்தண சிவாச்சாரியார்களால் கிரியைகள் நடத்தப்பட்டு ராஜகோபுரத்திற்கு பிரதான கும்பநீர் சொரியப்பட்டது.

இதன் பின்னர் இறுதியாக கும்பாபிஷேகம் இடம்பெற்றது. அபிஷேகத்தின் போது பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்துக்கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

16 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் கும்பாபிஷேகத்தில் அதிகளவான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.