வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (04) வெல்லம்பிட்டிய, கட்டுவன, கடலோர மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுகளில் நிகழ்ந்துள்ளன.

தொட்டலங்க – அம்பத்தலே வீதியில் உள்ள கித்தம்பஹுவ பிரதேசத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

வெல்லம்பிட்டிய, கித்தம்பஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் வலஸ்முல்ல – மித்தெனிய வீதியில் உள்ள திருவானாபொரல்ல பிரதேசத்தில் உள்ள வளைவு அருகே, பஸ் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கட்டுவன, ஹிந்தகரல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கரையோரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத் துறைமுக வளாகத்தில் உள்ள வை சந்தியில், கொழும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் வாகனம் ஒன்று முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் கொழும்பு – வெல்லவாய வீதியில் உள்ள மொரகெட்டியார பிரதேசத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சீனிமோதர, கொஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.