வீட்டுக்குள் புகுந்து நகைகள்,பணத்தை களவாடிய நபர் கைது

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் உரிமையாளர் இல்லாத நேரத்தில், நேற்று  திங்கட்கிழமை  வீட்டில்  வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது.

தர்மபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, இன்று செவ்வாய்க்கிழமை  சந்தேக நபரை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

36 வயதுடைய யாழ்ப்பாணம் எழாலைப் பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து தற்போது நான்கு மோதிரங்கள், ஒரு தோடு, ஒரு செயின், 41 ஆயிரத்து 860 பணமும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டில், 23 லட்சத்து 2500 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.