
விவசாயிகள் வீதியில் படுத்துறங்கும் நிலை
-கிளிநொச்சி நிருபர்-
நெல்லினை உலரவைக்கும் தளம் இன்றி வீதியில் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்மடு நகர் குளத்தின் கீழ் சிறுபோக பயிர்செய்கையினை மேற்கொண்டிருக்கும் தர்மபுரம் பகுதியிலுள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமக்கென ஒரு நெல் உலரவிடும் தளம் இல்லாத காரணத்தினால் வீதியை மறித்து நெல்லை உணர விடுவதாகவும் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணமாக இரவு வேளைகளிலும் அவ்வீதியில் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யும் வியாபாரிகள் தமக்கு தேவையான எரிபொருள் பெற முடியாத காரணத்தினால் தொடர்ச்சியாக அறுவடை முடிந்து 15 நாட்கள் கடந்த நிலையிலும் வீதியிலேயே நெல்லை உலரவிட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி புரியுமாறு கல்மடு குளத்தின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொண்டிருக்கும் கமக்கார அமைப்புகள் கேட்டுக் கொள்கின்றனர்.