
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் ஊடாக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரொஷான் ரணசிங்க, நீர்பாசனம், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் என அனைத்து விதமான அமைச்சுப் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஐசிசி தடை விதித்ததுடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் நிலவி வருகின்றன.
இந்தநிலையிலேயே அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், தற்போதைய சூழலில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும், ஜனாதிபதியும், சாகல ரத்நாயக்கவுமே ஏற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
தமது வாழ்க்கை தொடர்பில், நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
134 பேர் வாக்களித்து ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்திருப்பினும், அவர் பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவும் நிலையில், பாதுகாப்பு அவசியமாகும் என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
