விபத்தில் படுகாயமடைந்த லொறியின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

லொறி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லொறியின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாத்தளை பகுதியைச் சேர்ந்த வெலகெதர நிஸான் சானக (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் லொறி ஒன்றில் உதவியாளராக பணிபுரிகின்றார், கடந்த 14ஆம் திகதி மாத்தளையில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த லொறியில், சாரதிக்கு அருகாமையில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கம் காரணமாக மன்னாரில் லொறி மரத்துடன் மோதி விபத்து சம்பவித்தது.

இதன்போது படுகாயமடைந்த குறித்த நபர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்