வினாத்தாள்கள் கசிவு விவகாரம் : கைது செய்யப்பட்ட பதில் அதிபர் விளக்கமறியலில்!

வடமத்திய மாகாணத்தில் தரம் 11 இற்கான தவணை பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பதில் அதிபர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பதில் அதிபர் அனுராதபுரம் தம்மென்ன குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, வினாத்தாள்கள் கசிந்த சம்பவத்தால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு ஒன்றரை மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் பொலிஸாருக்கு  உத்தரவிட்டுள்ளார்.