வாய்பேச முடியாத இளம் பெண்ணுக்கு நேர்ந்த அநீதி : சந்தேக நபருக்கு நீதிமன்று விடுத்த உத்தரவு!

-யாழ் நிருபர்-

நள்ளிரவு வேளை வீடு புகுந்து, வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில், ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பாதிக்கப்பட்ட பெண், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில்
செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த நபர் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 27 ஆம் திகதியன்று நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, இதையடுத்து குறித்த பெண்ணின் உறவினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொலிசாரின் நடவடிக்கைக்குள் சிக்காமல் குறித்த சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்றையதினம்
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய கொன்சபத்து அதிகாரியான ஹரிதாஸ் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் அடிப்படையில், நேற்றையதினம் நள்ளிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிசாரால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இநிநிலையில் குறித்த நபரை எதிர்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.