வாகன விபத்தில் 13 பேர் காயம்

கம்பஹா, பெலும்மஹர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பெலும்மஹர சந்தியில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் மீது திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 13 பேர் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 10 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது பேருந்தின் பின்னால் மற்றும் கொள்கலனுக்கு முன்னும் பயணித்த 07 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.