
வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் ஊழியர் மீது துப்பாக்கி சூடு!
பாணந்துறை, வேகட பகுதியில் முச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிலையமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் குறித்த நபரின் முதுகில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் T-56 துப்பாக்கியால் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்துவதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வௌிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நிலங்கவின் நெருங்கிய உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.