வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களை மடக்கி பிடித்த வியாபாரி

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பகுதியில், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள், பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வல்லை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தூர் பகுதியில் இறைச்சி வியாபாரம் செய்யும் வியாபாரி, வல்லை பகுதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் கத்தி முனையில் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்த 3 லட்சம் ரூபா பணத்தினை கொள்ளை அடித்துள்ளனர்.

சாமர்த்தியமாக செயல்பட்ட இறைச்சி வியாபாரி ஒரு இளைஞனை துரத்திப் பிடித்தார். மற்றையவர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்று இருந்தார்.

தப்பி சென்ற இளைஞன் நாவல் காட்டு பகுதியில் உள்ள கோயில் கேணியில் கால் கழுவிக் கொண்டிருந்த போது பிடிபட்டார்.

வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த இரு இளைஞர்களின் உடைமையில் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டதுடன், இருவரும் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.