வலி வடக்கு மக்களின் ஒரு பகுதி காணிகள் கையளிக்கப்படவுள்ளது – அமைச்சர் டக்ளஸ் –

-யாழ் நிருபர்-

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு பகுதி காணிகள் எதிர்வரும் மூன்றாம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற் தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வலி வடக்கில் சுமார் 2 ஆயிரத்து 300 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள நிலையில் அதன் ஒரு பகுதி காணிகளை பாதுகாப்பு தரப்பு இவ்வாறு கையளிக்கவுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுக்காக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலி வடகில் உள்ள தனியார் காணிகளை பகுதி பகுதியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.

இதையடுத்து யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் களவிஜயத்திலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள ஒரு பகுதி காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே வலி வடக்குப் பகுதியில் உள்ள விவசாய காணிகள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு காரணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் கரிசனை உடன் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.