
வருடாந்தம் ஆயிரத்து 800 பேர் வரை தொழுநோயினால் பாதிப்பு
நாட்டில் வருடாந்தம் ஆயிரத்து 800 பேர் வரை தொழுநோயினால் பாதிக்கப்படுவதாக தேசிய தொழுநோய் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
தொழுநோயாளர்களை அடையாளம் காண்பதற்கான செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார்.
தொழுநோயானது பக்டீரியாவால் பரவக்கூடியதாகும். வருடாந்தம் 1,500 முதல் 1,800 வரையான தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இவ்வாறு அடையாளம் காணப்படும் தொழுநோயாளர்களில் 12 சதவீதமானோர் 15 வயதுக்குட்பட்டவர்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. குறித்த தொழுநோயாளர்களில் 6 வீதமானவர்களுக்கு உடல் அவையங்களை இழக்க நேரிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோயானது சமூகத்தில் தொடர்ந்தும் பரவி வரும் ஒரு தீவிர நோயாக உள்ளது. நோயாளர்களை விரைவில் அடையாளம் கண்டு சிகிச்சையளிப்பதன் ஊடாக இந்த நோய் பரவலை தடுப்பதற்கு இயலுமானதாக இருக்கும். இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
இதனூடாக தொழுநோய் தொடர்பான தவறான அபிப்பிராயங்களை இல்லாமல் செய்வதற்கும், நோயாளர்களுக்கு உரிய வகையில் சிகிச்சையளிப்பதற்கும் இலகுவானதாக இருக்கும் எனவும் தொழுநோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
