வட மாகாண புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சரை நியமிக்க கோரிக்கை

-மன்னார் நிருபர்-

வட மாகாணத்திற்கான புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் டீ. எம்.சுவாமிநாதனை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ சமீயூ முகம்மது பஸ்மி தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

இதன் அடிப்படையில் வட மாகாண மக்களுக்கு நன்கு பரிச்சயமான முன்னாள் அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனை அம்மாகாணத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

கடந்த 1994ஆம் ஆண்டு தொடக்கம் மேல் மாகாண ஆளுநராகவும், பல ஆணைக் குழுக்களின் உறுப்பினராகவும், டி.எம் சுவாமிநாதன் சேவையாற்றியுள்ளார்.

அத்துடன் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

மேலும், கடந்த நல்லாட்சி காலத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் இந்து சமய விவகார மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக இவர் பணியாற்றி, வடக்கு கிழக்கு பகுதி உட்பட முழு நாட்டிற்கும் மாபெரும் சேவைகளை ஆற்றியவர்.

மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாண மக்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆயிரக்கணக்கான புதிய வீடுகளை பெற்றுக் கொடுத்தவர்.

அத்துடன் அவர் அமைச்சராக செயலாற்றிய காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் வறுமை நிலையுடைய பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு, குறித்த குடும்பங்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டது.

இந்த வகையில் வட மாகாண மக்களின் மனங்களில் தனது சேவைகள் மூலம் நீங்க இடம்பிடித்து இலங்கை தேசத்திற்கும் குடி மக்களுக்கு ஆற்றிய நற்சேவைகளை கருத்தில் கொண்டு டீ.எம்.சுவாமிநாதனை வட மாகாண ஆளுநராக, நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என விரிவான கடிதமொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமைப்பாளர் ஏ.சமீயூ முகம்மது பஸ்மி மேலும் தெரிவித்தார்.