வடக்கிலும், தெற்கிலும் அதிகாரத்தை கைப்பற்ற இனவாதம் தலைதூக்கியுள்ளது – ஜனாதிபதி

வடக்கிலும், தெற்கிலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாதம் தலைதூக்கியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
16 ஆவது இராணுவ வெற்றி தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு, இதனைத் தெரிவித்த அவர் இந்த இனவாதம், பலத்தைக் கைப்பற்றும் நோக்கில் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள இராணுவ நினைவுச் சின்னத்துக்கு முன்பாக இராணுவ வெற்றி தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் முப்படைத் தளபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சகலரும் ஒன்றிணைந்துள்ள இந்த தருணத்தில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதிருக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இன, மதம் என்ற பேதமின்றி நாட்டுக்காகப் போரிட்டவர்களைத் தினமும் நாம் நினைவுகூர வேண்டும். நாடு அவர்களுக்குக் கடன் பட்டுள்ளது.
யுத்தம் என்பது பாரிய அழிவுகளையும், இழப்புகளையும் மட்டுமே ஏற்படுத்தக் கூடியது என்பதை என்னைக் காட்டிலும், களம் நின்று போரிட்ட இராணுவத்தினர் நன்கறிவார்கள்.
யுத்தத்தில் போரிட்ட படையினரின் நோக்கம் யுத்தம் வேண்டும் என்பதல்ல, மாறாகச் சமாதானத்தை எதிர்பார்த்தே அவர்கள் போரிட்டனர்.
வடக்கு, கிழக்கு என்ற பேதமின்றி இந்த போரினால் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. எந்தவொரு பெற்றோருக்கும், தமது பிள்ளைகள் பெறுமதியானவர்கள்.
மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தடுத்து, அமைதியானதொரு நாட்டை எதிர்கால சந்ததிக்கு கையளிப்பதே தற்போதுள்ள எம் அனைவரினதும் பொறுப்பாகும்.
எனவே, சந்தேகம், கோபம், வெறுப்பு என்பவற்றைக் களைந்து, சகோதரத்துவம், கருணை, பாசம் மிக்க நாட்டினை அனைவரும் உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.