லசந்த விக்ரமசேகர பாதுகாப்பு கோரியும் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை

வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையை பாதாள உலகக்குழு நடவடிக்கைகள் என்ற முத்திரையின் கீழ், மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், இந்தக் கொலை தொடர்பாக அரசாங்கத்தின் கருத்துகள் குறித்தும் அவர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முன்னதாக, லசந்த விக்ரமசேகர பொலிஸ்மா அதிபருக்கு பாதுகாப்புக் கோரி 2025 ஓகஸ்ட் மாதம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே அல்லது பிரதேசசபை வளாகத்திற்குள் தன்னை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியதாகவும் ரெஹான் ஜெயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, அந்தக் கடிதத்தில் பொலிஸ் பாதுகாப்பையும் கோரியிருந்ததாகவும் ஆனால், பொலிஸ் பாதுகாப்பு ஒருபோதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, கொலை செய்யப்பட்ட தவிசாளர் லசந்த விக்ரமசேகர குறித்துப் பரவி வரும் கருத்துகள் புதியவை அல்ல என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் சில மாதங்களுக்கு முன்னரே வெளிவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், லசந்த விக்ரமசேகரவுக்கு எதிரான பெரும்பாலான வழக்குகள் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் தொடுக்கப்பட்டது என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.