ரயில் தடம் புரண்டு விபத்து
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ரயில் நிலையம் அருகே சபர்மதி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து குஜராத்தின் அகமதாபாத்துக்கு சபர்மதி விரைவு ரயில் இயக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் கான்பூர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் பெரிய பாறை வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தண்டவாளத்தின் மீது இருந்த பெரிய பாறை மீது ரயில் என்ஜின் மோதியதால், ரயிலின் 20 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து கான்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே துறை ஊழியர்கள், தடம் புரண்ட சபர்மதி விரைவு ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் கான்பூர் – ஜான்சி மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
