
ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் – துமிந்த நாகமுவ
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அல்ஜஷீராவுக்கு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியதன் ஊடாக, அந்த அறிக்கை அரச கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படாத ஒன்று எனக் குறிப்பிடுவதாக துமிந்த நாகமுவ கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும், அவ்வாறானால் அப்போதைய ஜனாதிபதி எதற்காக அதன் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை எனவும் முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பயணத்தைப் பாதுகாப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார் எனவும் முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.
