யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டியைச் சேர்ந்த யுவதி ஒருவர் செய்த மோசடி!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, தென்னிலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது.

இதன்போது கண்டியை சேர்ந்த யுவதி ஒருவர், புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்து, இரண்டு மாதங்களாக மருத்துவபீட விரிவுரைகளில் பங்குபற்றியுள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர்.

இதன்போது ஒரு மாணவர் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது, அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மருத்துவபீடத்தின் பீடாதிபதி ஆர்.ரவீந்திரனை தொடர்புகொண்டு வினவியபோது, அவர் அதனை உறுதிப்படுத்தினார்.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது, அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.