யாழ்.செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி : நிறைவுக்கு வரும் இரண்டாம் கட்ட பணிகள்

யாழ்ப்பாணம், செம்மணி- சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன.

சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து, இரண்டாம் கட்ட அகழ்வின்போது மொத்தமாக 65 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், அவை அனைத்தும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மனித புதைகுழியின் முதலாவது குழியிலிருந்து 63 மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், இரண்டாவது குழியிலிருந்து இரண்டு எலும்புக்கூட்டு தொகுதிகளும் மீட்கப்பட்டதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்

இதேவேளை, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் தொடர்பில், நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட உள்ளதாகவும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் கூறினார்.

அதற்கமைய, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர், மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு கிடைக்க பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.