யாழில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல்! நடவடிக்கை எடுக்க தவறினால் சேவை முடங்குமென எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்றுபுதன்கிழமை வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்து.

இதையடுத்து தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், தாக்குதலாளியை கைது செய்த வேண்டும் என்றும் கோரி தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் சங்கம் நாளை மறுதினம்  தீவகத்தில் சேவை முடக்கத்தை முன்னெடுக்க உள்ளாதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தெரியவருகையில் –

இன்று புதன்கிழமை  மாலை யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வழித்தடம் 780 தனியார் பேருந்து, பயணிகளுடன் ஊர்காவற்றுறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயம், அல்லைப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒருவர் பேருந்தை வழிமறித்து ஏறி, “உனக்கு வாகனம் ஓட்டத் தெரியாதா” எனக் கேட்டு  சாரதி மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது சாரதி கடுமையாக தாக்குதலுக்குள்ளாவதை அவதானித்த பயணிகள் தாக்குதலாளியை பேருந்தில் இருந்து இறக்கியுள்ளனர்.

இதையடுத்து கடும் தாக்குதலுக்குள்ளான சாரதி, பயணிகளுடன் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளதுடன், தாக்கிய நபர் தொடர்பான விவரத்தையும் மக்களின் தரவுகளுடன் பொலிசாருக்கு வழங்கியுள்ளார்.

அத்துடன் கடமையின் போது கடுமையாக தாக்குதலுக்காளான சாரதி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த குறித்த சாலையின் தனியார் பேருந்து நிர்வாகத்தினர்  குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது விடின் நாளை மறுதினம் 09 ஆம் திகதி பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க உள்ளதாகவும்  தெரிவித்தனர்.