யாழில் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் நல்லூர் திருவிழாவுக்கு மண் விநியோகம்? -வீடியோ இணைப்பு-

-யாழ் நிருபர்-

அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்காக மணல் விநியோகம் இன்று சனிக்கிழமை இடம்பெற்று வருகிறது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல் மண் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டுவந்தது.

அம்பன் கிழக்கில் பத்து இலட்சம் கியூப் மணல் மண் அகழப்பட்டு சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தமது கிராமத்தை தொடர்ந்தும் அழிவிற்கு உட்படுத்தக் கூடாது என்பதன் அடிப்படையிலும், இம்முறை மணல் மண் வழங்குவதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து மணல் மண் வழங்க மறுத்திருந்தனர். அதேவளை தொடர்சியாக அம்பன் கிழக்கில் மட்டும் அகழக்கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் காலை 9 மணி முதல் மண் விநியோகம் தொடர்பான முறுகல் நிலை அம்பன் பிரதேசத்தில் பிரதேச செயலர் மற்றும் கிராம மக்களுக்கு இடையில் இடம்பெற்றது. மக்கள் எதிர்ப்பினையும் மீறி நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் மண் விநியோகம் இடம்பெறுகிறது.

வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் தனது கிராமத்தில் மணல் மண் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மீறி தனி நபர் ஒருவரது பெயரில் கனிய வளங்கள் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் அனுமதியினை பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் தனி நபர் ஒருவருக்க கனிய மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.