யாழில் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடம் முற்றுகை!

-யாழ் நிருபர்-

பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டனர்.

இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இந்த தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் மீட்கப்பட்டன.

யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, வண்ணார் பண்ணை சிவன் கோயிலுக்கு பின் வீதியான மானிப்பாய் வீதிக்கு அண்மித்த ஒருவீட்டில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்து கொண்டிருந்த பொழுது, யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்ப்பானம் போதை ஒழிப்பு பிரிவும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது கஞ்சா கலந்த 4 கிலோ 250கிராம் எடையுள்ள மாவா பாக்கு, 12 கிலோ 500 கிராம் எடையுடைய பீடித்தூள் மற்றும் 24ரின் வாசனைத் திரவியம் போன்ற பொருட்கள் கைபெற்றபட்டன.

இதன்போது 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.