
மோடியிடம் கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது முக்கியமானது: டக்ளஸ் தேவானந்தா
-யாழ் நிருபர்-
இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சனைகளில் இழுவைமடிப் படகுகள் ஊடாக இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதும் ஒன்று.
வடமாகாண தமிழ் கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் நிலையில் இருக்கிறது. எனவே கட்டாயமாக இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை.
இது தொடர்பாக நான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கச்சத்தீவு மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு மோடி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்தார்.
இது ஒரு அரசியல் ரீதியான ஓர் தீர்மானமே. இது நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒரு விடயம் என அவர் குறிப்பிட்டார்.