மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

-மூதூர் நிருபர்-

மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து பாடசாலைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை 2ஆவது நாளாக பாடசாலையை மூடி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையில் கடமையாற்றும் பெண் ஆசிரியை ஒருவரை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும் அவரை மீண்டும் இப்பாடசாலைக்கு இணைக்குமாறும் கோரியே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பாடசாலைக்கு மாணவர்கள் செல்லாது பாடசாலை நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் கந்தளாய் வலயக்கல்வி பணிப்பாளர் பாடசாலைக்கு வந்து கலந்துரையாடியபோது நுழைவாயிலை பெற்றோர்கள் மூடி அவரை வெளியில் செல்லாது தடுத்திருந்தனர்.

மேலும், வலயக் கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தோடு பேசி தற்காலிகமாக இவ்வாசிரியையின் இடமாற்றத்தை ரத்து செய்வதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.