மூதூர் -சந்தனவெட்டை கிராமத்தில் பழங்குடி தின நிகழ்வு -வீடியோ இணைப்பு-
-மூதூர் நிருபர்-
உலக பழங்குடிகள் தின நிகழ்வு மூதூர் -சந்தனவெட்டை கிராமத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
திருகோணமலை குவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பு ,சிவில் அமையம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
“இலங்கையின் கரையோர பழங்குடி மக்களின் உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைவோம் ” எனும் தொணிப் பொருளின் கீழ் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் பழங்குடி சமூக பாரம்பரிய பூஜை இடம்பெற்றன.அத்தோடு பழங்குடி சமூகத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் காட்டுக்கு தேன் எடுக்கச் செல்வோருக்கு அரச அனுமதியுடனான அடையாள அட்டையும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை தேன்,குளத்து மீன் கருவாடு,பழங்குடியினரின் உணவான வள்ளிக்கிழங்கு,அல்லைக்கிழங்கு என்பன நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினருக்கு சிற்றுண்டி உணவாக பகிரப்பட்டது.
நிகழ்வில் மட்டக்களப்பு பழங்குடி அமைப்பின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் ,திருகோணமலை குவேனி பழங்குடி அமைப்பின் தலைவர் நடராசா கணகரெட்ணம் ,கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் பேராசிரியர் சி.ஜெய்சங்கர்,திருகோணமலை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் சோ. லதா மங்கேஸ், மூதூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி தாமரை மனாலன் லலிதாதேவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.