மூதூரில் விபத்து : 3 சிறுவர்கள் உட்பட 29 பேர் காயம்!
-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -இருதயபுரம் பகுதியில் பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அம்பாறையிலிருந்து சாரதி உதவியாளர் உற்பட இருவருடன் திருகோணமலை நோக்கி பயணித்த லொறியும், கம்பஹா -வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் சேருவில ரஜ மஹா விகாரையை பார்வையிடுவதற்காக பயணித்த பேருந்தும் இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இவ் விபத்தில் காயமடைந்த 29 பேரில் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
விபத்தில் காயமடைந்தோர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.