முல்லைத்தீவு புளியம்பொக்கணை சந்தி பாலம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
பரந்தன் முல்லைத்தீவு வீதியின் புளியம்பொக்கணை சந்தியிலுள்ள பிரதான பாலமானது பல வருடங்களின் பின்பு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு குறித்த பாலம் புனரமைப்பு பணிகளுக்காக ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை உடைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாகவும் நாட்டின் பொருளாதார நிலை காரணமாக நிதியின்மை காரணமாகவும் குறித்த புனரமைப்பு கைவிடப்பட்டிருந்தது.
மேலும், குறித்த பாலத்தில் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டிருந்தன. இரண்டு இளைஞர்கள் கூட விபத்தில் உயிரிழந்திருந்தனர்.
அதனால் கிராம அமைப்புக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து புனரமைப்பு பணி முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


