
முல்லைத்தீவில் 78 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்கு!
-முல்லைத்தீவு நிருபர்-
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை குளவிக்கொட்டுக்கு இலக்காகி 78 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார்.
அத்தோடு, பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை அகற்றாமல் அசமந்த போக்காக செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை நேரடியாகச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய, பாடசாலைக் கட்டடத்தொகுதியிலிருந்த பப்பரக்கொப்பான் எனும் தேனீக்கூடு, தற்போது வீசிவரும் கடுமையான காற்றினால் உதிர்ந்து வீழ்ந்தமையினால், குளவிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கியுள்ளது.
இதனால் பாடசாலையில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த 78 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிலே 45 வரையான மாணவர்களும், சில ஆசிரியர்களும் முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
குறிப்பாக இரு மாணவர்களும், ஒரு ஆசிரியருமாக மூவர் மிகமோசமாக குளவிக்கொட்டுக்கு உள்ளானநிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தீவிரசிகிச்சைப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தேறியுள்ளதாகவும், எதுவித உயிர் பாதிப்புக்களும் இல்லை எனவும், வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.