முன்னாள் போராளி கைது : வவுனியாவில் குழப்ப நிலை

மெய்யான தலைவர்கள் என அரசுடன் இணைந்து செயற்பட்ட சிலரது புகைப்படங்கள் தாங்கிய பாதாதைகளை அகற்ற முற்பட்ட முன்னாள் போராளி செ.அரவிந்தன் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், பொலிஸ் பாதுகாப்புடன் பதாதைகள் மீளவும் வைக்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகாமையில் தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுடன் இணைந்து செயற்பட்ட சிலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மெய்யான தலைவர்கள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறித்த பதாதைகளில் விடுதலைப் புலிகளால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தது.

குறித்த பதாதைகள் மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன் குறித்த பகுதிக்கு சென்று இவற்றை இங்கு யார் வைத்தது இதனை உடனடியாக அகற்றுமாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கிருந்த இருவர் தாங்களே இதனை வைத்ததாகவும் இப்படி செய்யுமாறு சிலர் பணித்தமையால் இதனை செய்தோம்.அதனைவிட வேறு எதுவும் தமக்கு தெரியாது என்று கூறியதுடன், பதாதைகளையும் அகற்றினர்

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் பதாதைகளை வைத்தவர்களின் மீது நடவடிக்கையினை எடுக்காமல். முன்னாள் போராளியான அரவிந்தனை அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாக கைதுசெய்து அழைத்துச்சென்றனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரவிந்தன்,

தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காவே இந்த பதாதைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை இராணுவமே ஒழுங்கமைத்துள்ளது.இந்த விடயத்தில் தலையிடவேண்டாம் என்று இராணுவ புலனாய்வுபிரிவின் மேயர் ஒருவர் வந்து தன்னை அச்சுறுத்திச் சென்றதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை பொலிசார் அச்சுறுத்தியதுடன், அவர்களது கடமையினை செய்யவிடாமல் இடையூறை ஏற்படுத்தினர்.

அத்துடன் குழப்பநிலை முடிவிற்கு வந்ததும் குறித்த பகுதியில் போக்குவரத்து பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், அவர்களின் பாதுகாப்புடன் அகற்றப்பட்ட பதாதைகள் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்